காஞ்சிபுரம்: பெட்ரோல். டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து காஞ்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வக்கீல் எழிலரசன், ஆர்.டி.அரசு, புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் வரவேற்றார்.ஆர்ப்பாட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். அப்போது, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து மாட்டு வண்டியில் கொண்டு சென்றனர். மாவட்ட அவைத்தலைவர் சேகரன், தசரதன், வெளிக்காடு ஏழுமலை, பொருளாளர் கோகுலக்கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.