கலெக்டர் தகவல் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடிநாள் வசூல் இலக்கை எட்டியவர்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை, பிப்.23: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு பின் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து விலையில்லா வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, வங்கி கடன், பசுமைவீடு, சாலைவசதி, குடிநீர்வசதி, முதியோர் உதவித்தொகை, திருநங்கைகளுக்கான வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி 307 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்களை தொடர்புடைய அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் கொடிநாள் 2019 வசூல் இலக்கை எய்திய 15 அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நீச்சல் போட்டியில் தமிழ்நாடு அளவிலான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்ல் புதுக்கோட்டை மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. அந்த வகையில் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் டிஆர்ஓ சரவணன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.