வாழ்க்கையை மாற்றும் விரதமும் வழிபாடும்

ஞாயிறு
நவகிரகங்களில் முதன்மையானவராக வணங்கப்படும் சூரிய பகவானுக்கு, ஞாயிற்றுக்கிழமை சிறந்த நாளாகும். இந்த நாளில் சூரிய பகவானுக்கு விரதமிருந்து வழிபடுவது எதிரிகளின் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பையும் அமைதியையும் தரும். மேலும், வாழ்வில் ஒளி செலுத்தும் சக்தியாக அவர் அருள் செயல்படும். இதன் மூலம் வாழ்க்கை சூரியனைப் போல பிரகாசமாக மாறும்.

திங்கள்
திங்கட்கிழமையில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவது, குடும்பத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் தருகிறது. இதனால் மனம் தெளிவடைந்து, உள்ளார்ந்த ஆற்றல் அதிகரிக்கிறது. குடும்ப உறவுகளில் பாசத்தையும், ஆரோக்கியத்தையும் மேம் படுத்தஉதவுகிறது. சிவனின் அருள் வாழ்வில் எல்லா நன்மைகளையும் சேர்க்கும்.

செவ்வாய்
செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனை வழிபடுவதற்கு சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி துர்க்கையை வணங்கினால், குடும்பத்தில் துன்பங்கள் அகன்று அமைதி நிலவும். இந்த நாளில் முருகப் பெருமானை வணங்கி கந்தசஷ்டி கவசம் படிப்பது, அனைத்து தோஷங்களையும் நீக்கி நன்மைகளை அதிகரிக்க உதவுகிறது. விரதம் இருந்து இருவரையும் அர்ச்சனை செய்தால், வாழ்வில் தடை களைத் தாண்டி முன்னேற்றம் அடையலாம்.

புதன்
புதன்கிழமை ஆனைமுகத்தானை வணங்க மிகவும் சிறப்பான நாளாகும். இந்த நாளில் விநாயகருக்கு விரதம் இருந்து வழிபடுவது, அனைத்து காரியங்களிலும் தடைகள் நீங்கி வெற்றியைக் கொடுக்கும். அறிவு, நலம், மற்றும் செல்வம் பெறும் நாளாக விளங்குகிறது.

வியாழன்
வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு மற்றும் லட்சுமி தேவி ஆகியவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து இக்கடவுள்களை வழிபடுவதால் கல்வியில் வளர்ச்சி, செல்வம் பெருகி வாழ்க்கையில் நன்மைகள் அடைய முடியும். இந்த நாளின் வழிபாடு குடும்ப நலனையும் ஆன்மிக முன்னேற்றத்தையும் தருகிறது.

வெள்ளி
வெள்ளிக் கிழமை அம்மனின் அருளைப் பெற சிறந்த நாளாகும். இதேபோல் செல்வத்தையும் சாந்தியையும் வழங்குபவளான அம்மனை வணங்கவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. பெண்கள் வெள்ளிக் கிழமை விரதமிருந்து அம்மனை வழிபடுவதால், அவர்கள் குடும்பத்தில் அமைதி நிலைத்து, சகல நன்மைகளும் அடையலாம். இந்த வழிபாடு குடும்பத்தை காப்பதும், வளமான வாழ்வை மேம்படுத்துவதும் ஆகும்.

சனி
நவகிரகங்களில் முக்கிய இடம் பெறும் சனிபகவானின் அருளை பெற, சனிக் கிழமை சிறந்த நாளாகும். இந்த நாளில் சனிபகவானுடன் ஆஞ்சநேயர், பெருமாள் மற்றும் காளி தேவிக்கும் வழிபாடு செய்யப்படுகிறது. அருகிலுள்ள சிவாலயங்களில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷத்தை குறைக்கும். இந்த வழிபாடு மனதில் அமைதியையும், வாழ்க்கையில் நன்மைகளையும் ஏற்படுத்தும். விரதமும் வழிபாடும் வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றும் சக்தி வாய்ந்த கருவியாகும். வாரத்தின் ஒவ்வொரு நாளும் உரிய கடவுளை ஆராதனை செய்து விரதம் இருப்பதன் மூலம், நம் வாழ்வில் நன்மைகள் பெருகும்!.

Related Stories: