தாம்பரம்: தாம்பரம் அருகே செம்பாக்கத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு ரூ.1 கோடியே 2 லட்சம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனையொட்டி பண பட்டுவாடடாவை தடுக்க மாநிலம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய ரிசர்வ் படை உதவியுடன், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன.
தவிர முக்கிய சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தாம்பரம் – வேளச்சேரி சாலையில் உள்ள செம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி தினேஷ் தலைமையிலான குழுவினர், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்ட போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அதனை எண்ணி பார்த்த போது மொத்தம் ரூ.1 கோடியே 2 லட்சம் இருந்தது. இதனை தொடர்ந்து வேனில் வந்த இருவரிடமும் அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்குபின் முரணாக தகவல் தெரிவித்துள்ளனர், மற்றும் உரிய ஆவணம் எதையும் காட்டவில்லை. இதனை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் கைப்பற்றப்பட்ட ரொக்கமும், பணத்தை கொண்டு வந்த இருவரையும் அதிகாரிகள் ஒப்படைத்ததை தொடர்ந்து தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
