காடையாம்பட்டி நிறுத்தத்தில் அரசு பஸ் நிற்காமல் சென்றதால் மாணவர்கள் மறியலுக்கு முயற்சி

இளம்பிள்ளை, பிப்.23: காடையாம்பட்டி நிறுத்ததில், அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் மாணவர்கள் மறியலுக்கு முயன்றனர். இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காடையாம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் அரசு பஸ் சென்று வருகிறது. காலை 8.30 மணிக்கு வரும் இந்த பஸ் இளம்பிள்ளை, இடங்கணசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது. காலையில் விவசாயிகள் விளைவித்த காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகள் சேலத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்று வருகின்றனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகள் அங்குள்ள அரசு பள்ளிக்கு இப்பஸ்சில் தான் சென்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் வந்த அரசு பஸ் இடங்கணசாலை அருகே காடையாம்பட்டி பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் விரைந்து வந்த பெற்றோர்கள், பள்ளி செல்லும் நேரத்தில் பஸ்சை நிறுத்தாமல் சென்ற கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது பற்றி தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீசார் விரைந்து வந்து மறியலுக்கு முயன்ற பெற்றோர் மற்றும் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இது குறித்து அரசு போக்குவரத்து மேலாளரிடம் தகவல் அளித்து, இது போன்ற தவறு நடக்காத வகையில் சரிசெய்யப்படும் என தெரவித்தனர். இதை ஏற்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: