கைலாசநாதர் கோயிலில் லிங்கத்தின் மீது விழாத சூரிய ஒளி பக்தர்கள் ஏமாற்றம்

தாரமங்கலம், பிப். 23: தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலில், ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 21, 22 மற்றும் 23ம் தேதிகளில், கர்ப்பக்கிரகத்தில் உள்ள லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும். இந்த அரிய நிகழ்வை காண பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள். நடப்பாண்டு நேற்று கைலாசநாதர் கோயிலுக்கு சேலம், நாமக்கல், திருச்சி, தர்மபுரி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காலை 10 மணிக்கு மேல் கோயில் ராஜ கோபுரம் வழியாக வந்த சூரிய ஒளி, கருவறை முன் வந்து நந்தியின் மீது பட்டு உண்டியல் வரை வந்தது. ஆனால், மேகமூட்டத்தின் காரணமாக, லிங்கத்தின் மீது ஒளி விழவில்லை. இதனால் பக்தர்கள்  ஏமாற்றமடைந்தனர்.

பனமரத்துப்பட்டி பகுதியில்

கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சி திட்டம்

சேலம், பிப்.23: சேலம் பனமரத்துப்பட்டி வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு, வேளாண் திட்டங்கள் மற்றும் புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில், தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமப்பு வேளாண்மை அனுபவ பயிற்சி நடந்தது. தொடர்ந்து, சொட்டு நீர் பாசனம், தேனீ வளர்ப்பு, உயிர் உரங்கள் பயன்கள் உள்ளிட்டைவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டது. பின்னர், விவசாயிகளிடம் இருந்து வேளாண்மை குறித்த புதிய தகவல்களை, மாணவர்கள் தெரிந்து கொண்டனர். இந்த  பயிற்சி 75 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் 2 விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. இது விவசாயிகளுக்கு மட்டுமின்றி மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: