குமாரபாளையம், பிப்.23: அமைப்பு சாரா தொழிலாளர்கள் 3 சென்ட் வீட்டுமனை கோரி, குமாரபாளையத்தில் நேற்று ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய கம்யூனிஸ்ட் எம்எல் பிரிவு மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் ஊர்வலமாக சென்று, பைபாஸ் சாலையில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்தனர். முன்னெச்சரிக்கையாக எம்எல்ஏ அலுவலகம் முன் தடுப்பு அரண்கள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வந்த தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள் கண்டன கோஷமிட்டனர். கோரிக்கை மனுக்களை ஒட்டு மொத்தமாக வாங்கி, அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 850 மனுக்களை வாங்கிய தொழிற்சங்க நிர்வாகிகள், எம்எல்ஏ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் மாணிக்கம், சுப்ரமணி, வெங்கடேசன், எம்எல் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் நடராசன் ஆகியோர் பங்கேற்றனர்.