தர்மபுரி, பிப்.23: தினக்கூலியாக ₹380வழங்க வலியுறுத்தி, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை ஒப்படைத்து போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தங்களது ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் வீசி போராட்டம் நடத்தினர். பின்னர், அதிகாரிகளிடம் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும், கடந்த 15ஆண்டுகளாக சுமார் 8,400 பேர், மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த 22.2.2018 அன்று மின்வாரிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில், ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலி ₹380 என நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை அது முறையாக எங்களுக்கு வழங்கப்படவில்லை.
கஜா புயல் சீரமைப்பு பணியில் ஈடுபட்ட போது, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ₹380 வழங்கப்படும் என மின்சார துறை அமைச்சர் கொடுத்த வாக்குறுதி, இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மின்வாரியத்தில் களப்பணிகளில் 33 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் 2019ம் ஆண்டு கேங்மேன் என்ற புதிய பணியிடம் அறிவிக்கப்பட்டது. இதில் 37 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள தகுதியாக அறிவிக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றும் 5ஆயிரத்திற்கும் மேaற்பட்டோருக்கு, 40 வயதுக்கு மேல் உள்ளதால் புதிய பணியிட தேர்வில் பங்கேற்க முடியவில்லை. அனுபவம் இல்லாத புதிய நபர்களுக்கு ₹18,800 சம்பளத்தை மின்வாரியம் வழங்கியுள்ளது. எனவே, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக ₹380யை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.