திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மாயம் கடத்தலா என விசாரணை

கிருஷ்ணகிரி, பிப்.23: ஊத்தங்கரை அருகே திருமணமான 1 மாதத்தில் புதுப்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஊத்தங்கரை அருகே சின்னகுன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி கண்மணி(20). இவர்களுக்கு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கண்மணி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து லட்சுமணன் ஊத்தங்கரை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், எஸ்ஐ ராஜாமணி வழக்குப்பதிந்து குடும்பம் நடத்த விருப்பமின்றி கண்மணி எங்காவது சென்றாரா அல்லது அவரை யாராவது கடத்திச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண் மாயமானது சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: