×

தென்னிந்திய மக்களின் எதிர்காலத்தை சிதைக்கும் கருப்பு சட்டம்தான் தொகுதி மறுவரையறை: பெரம்பலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

பரப்புரையில் முதல்வர் கூறியதாவது:

இந்தியாவின் அரசியல் வரைபடத்தையே, தென்னிந்தியா மக்களின் எதிர்காலத்தையே சின்னாபின்னமாக்கும் கருப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று காலையில் உங்கள் ஸ்டாலின் கருப்பு கொடி ஏந்தி, அந்த சட்ட நகலை எரித்து நம்முடைய எதிர்ப்பை காட்டியுள்ளோம். தமிழ்நாட்டில் பரவியிருக்க கூடிய இந்த தீ டெல்லியை சுட்டெரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளேன். இதை எதிர்த்து நாம் போராடவில்லை என்றால் நாம் தமிழர்களாக இருந்து எந்த பயனும் இல்லை.

இன்னும் சொன்னால், இதை எதிர்காத யாருக்கும் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ள தகுதியில்லை. தமிழ்நாட்டை காப்பாற்றத்தான் ஆட்சிக்கு வந்தோம், தமிழ்நாட்டுக்கு ஆபத்து என்றால் திமுக சும்மா இருக்குமா?தந்தை பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் ஏற்கனவே செய்த போர் இது. வடக்குடன் போர் செய்வது தமிழ்நாட்டுக்கு புதிதல்ல

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை பட்டியலிட்ட முதல்வர்;
ஜெயங்கொண்டத்தில் காலணி தொழிற்சாலை, கங்கைகொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம். ராஜேந்திர சோழன் பிறந்த தினம் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூரில் புதிய நூலகம் கட்டடம், பெரம்பலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்வு. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.350 கோடியில் காவிரி-கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எறையூரில் புதிய சிப்காட் பூங்கா, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது

தொகுதி மறுவரையறை பற்றிய கேள்விக்கு பதில் அளிக்காமல் நாகர்கோவிலுக்கு வந்து பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்திவிட்டுச் சென்றுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் ரீதியாக விளக்கிவிட்டேன். தொகுதி மறுவரையறைக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக குரல் கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டுக்காக பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசவில்லை. அடிமைகளின் துணையோடு தமிழ்நாட்டுக்குள் நுழைய நினைக்கும் பாஜகவை தடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள் நுழைய நினைக்கும் பாஜகவை எல்லைக்கு
வெளியே விரட்டி அடிக்க வேண்டும்.

பழனிசாமிக்கு நீங்கள் தரும் 11வது தோல்வி மறக்கக் கூடாத அளவுக்கு இருக்க வேண்டும். 18 முறை தோற்றால் தோல்வி குருசாமி ஆகிவிடுவார் எடப்பாடி பழனிசாமி. தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுக்காத அதிமுக 234 தொகுதிகளிலும் தோற்றாலும் ஆச்சரியம் இல்லை. சி.ஏ.ஏ., எஃப்.சி.ஆர்.ஏ. சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்து சிறுபான்மையினருக்கு எடப்பாடி துரோகம். 3 வேளாண் சட்டங்களுக்கு முட்டுக் கொடுத்து விவசாயிகளுக்கு துரோகம் செய்துள்ளார் பழனிசாமி. தொகுதி மறுவரையறைக்கு முட்டுக் கொடுத்து தமிழ்நாட்டுக்கே துரோகம் செய்துள்ளார் எடப்பாடி. என முதல்வர் பேசியுள்ளார்.

Tags : South India ,Perambalur ,K. STALIN ,Chennai ,Tamil Nadu Assembly elections ,Dimuka ,First Minister ,Perambalur district ,Chief Minister ,K. In ,Stalin ,
× RELATED 2027ல் 7 மாநிலங்களில் தேர்தல் நடப்பதால்...