சட்டசபையில் அறிவித்ததோடு நிற்கும் சிமெண்ட் கால்வாய் பணி திட்டம்

சிவகங்கை, பிப்.23: சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசன சீல்டு கால்வாயில், சிமெண்ட் கால்வாய்(கான்கிரீட்) அமைக்கும் பணிக்கு 110விதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எந்தப்பணியும் நடைபெறவில்லை. பெரியாறு கால்வாயில் சிவகங்கை மாவட்ட பாசன பகுதிகள் பயன்பெறும் வகையில் 1925ம் ஆண்டு சீல்டு மண் கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் மதுரை மாவட்டம் குறிச்சிப்பட்டி கண்மாயில் தொடங்கி, சிவகங்கை மாவட்டம் சாலூர் பூக்குழி கண்மாயில் முடிவடைகிறது. எட்டு கி.மீ நீளமும், 30அடி அகலமும் கொண்ட இக்கால்வாயில் கடந்த 2 ஆயிரமாவது ஆண்டில் ரூ.48 லட்சத்தில் குறிச்சிப்பட்டி கண்மாய் காரமடை முதல் கண்மாய் கழுங்கு வரை சுமார் ஒரு கி.மீ தூரம் கண்மாயின் மேற்பகுதியில் பைபாஸ் கால்வாய் அமைக்கப்பட்டது.

கழுங்கில் இருந்து தொடங்கி கல்லராதினிப்பட்டி, திருமலை, வலையராதினிப்பட்டி, மேலப்பூங்குடி, திருமண்பட்டி, பாப்பாகுடி, சாலூர், சோழபுரம் எட்டுச்சேரி கண்மாய் வரை சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்து 700 ஏக்கர் விவசாய நிலங்கள் இக்கால்வாயால் பயன்பெறும். மழைநீர் திறக்கும் நேரத்தில் அதிகப்படியான நீர் வீணாவதால் சீல்டு மண் கால்வாயை, சிமெண்டால் அமைக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு சீல்டு கால்வாயை சிமெண்ட் கால்வாயாக மாற்றியமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கால்வாய் அமைப்பதற்கான கணக்கீட்டு பணி நடந்தது. கருத்துரு தயார் செய்து, ரூ.21.96 கோடிக்கு திட்ட மதிப்பீடும் பொதுப்பணித்துறை சார்பில் சென்னை வடிவமைப்பு கோட்டத்திற்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து 2018ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் ரூ.22 கோடி இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்வதாக 110விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் அதன் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. குடிமராமத்து பணியில் ரூ.1.47 கோடியில் ஒரு கி.மீ தூரத்திற்கு மட்டும் 2019ல் பணிகள் நடந்தது.

வெறும் அறிவிப்பு மட்டுமே விவசாயிகள் கூறியதாவது:பெரியாறு கால்வாயில் நீர் திறந்தால் சிவகங்கை மாவட்டத்திற்கு எவ்வளவு பங்கு நீர் வழங்க வேண்டும். சிமெண்ட் கால்வாய் அமைக்க வேண்டும் என 2016ம் ஆண்டிலேயே நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்டும் வேறு எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. வெறும் அறிவிப்புகளை வெளியிட்டு எந்தப்பயனும் இல்லை. கால்வாயில் நீர் தருவது மற்றும் கால்வாய் பராமரிப்பு பொறுப்பு மதுரை பொதுப்பணித்துறை வசம் உள்ளது. கண்மாய்கள் பராமரிப்பு பொறுப்பு சிவகங்கை பொதுப்பணித்துறை வசம் உள்ளது. இதுகுறித்து இரண்டு மாவட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். சீல்டு கால்வாயில், விரைவில் சிமெண்ட் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: