×

தங்கத்தேரில் எழுந்தருளிய காஞ்சி காமாட்சியம்மன்

காஞ்சிபுரம், ஏப்.16: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தங்கத்தேர் உற்சவத்தில் எழுந்தருளிய காஞ்சி காமாட்சியம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தமிழ் புத்தாண்டு வருடப்பிறப்பை முன்னிட்டு சக்தி பீட ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக விளங்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் தங்கத்தேர், ராஜவீதி உலா உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. ராஜ வீதி உலா தங்கத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, காஞ்சி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, பச்சை கரை, சிகப்பு நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிவித்து, மல்லிகை பூ, மனோரஞ்சிதப் பூ, செண்பகப் பூ உள்ளிட்ட மலர் மாலைகள் சூட்டி, லட்சுமி, சரஸ்வதி, தேவிகளுடன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தேரில் எழுந்தருளினார். பின்னர் மேள தாள வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வர காஞ்சிபுரம் நகரின் முக்கிய ராஜ வீதிகளில் தங்கத்தேர் வீதி உலா உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தமிழ் புத்தாண்டை ஒட்டி நடைபெற்ற தங்கத்தேர் ராஜவீதி உலா உற்சவத்தை காண வழிநெடுகிலும் திரளான பக்தர்கள், காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Kanchi Kamakshi ,Amman ,Kanchipuram ,Kanchi Kamakshi Amman ,Tamil New Year ,Shakti Peethas ,
× RELATED பெரும்புதூர் பகுதியில் கள்ள சந்தையில் சிலிண்டர் விற்பனை அதிகரிப்பு