விஜிலென்ஸ் சோதனையில் ₹25 லட்சம் பயிர்க்கடன் முறைகேடு அம்பலம் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் ேதசூர் கூட்டுறவு வங்கியில் விடிய விடிய நடந்த

வந்தவாசி, பிப்.21: வந்தவாசி அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விஜிலென்ஸ் போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் பயிர்க்கடனில் ₹25லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை(53). தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில் சீயமங்கலம் கிராமத்தை சேர்ந்த தேவி ₹50 ஆயிரம் பயிர்க்கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்து கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. எனவே, தேசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தேவி வாங்கியிருந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்க, வங்கி செயலாளர் அண்ணாதுரை, ₹5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தேவி புகார் செய்தார். இதையடுத்து, போலீசார் அளித்த வழிகாட்டுதல்படி தேவி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில், கூட்டுறவு வங்கி செயலாளர் அண்ணாதுரையிடம் வழங்க ₹5 ஆயிரத்தை எடுத்து சென்றார். ஆனால் அண்ணாதுரை, பணத்தை நேரடியாக வாங்காமல், அருகே உள்ள மேஜை மீது வைக்கும்படி கூறியுள்ளார். அதன்படி தேவி, பணத்தை மேஜை மீது வைத்துள்ளார். அண்ணாதுரை பணத்தை நேரடியாக கையில் வாங்காததால், லஞ்சஒழிப்பு போலீசாரின் பிடியில் இருந்து தப்பினார். இருப்பினும் போலீசார் நேற்று அதிகாலை 4.30 மணி வரை விடிய விடிய சோதனை நடத்தினர். அதில் பயிர் கடன் தள்ளுபடி செய்வது, பயிர் கடன் வழங்குவது உட்பட பல்வேறு வகையில் ₹25 லட்சம் வரை முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். ேமலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு வங்கி செயலாளர் ₹25 லட்சம் வரை முறைகேட்டில் ஈடுபட்டு விஜிலென்ஸ் போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: