திருவண்ணாமலை, பிப்.21: திருவண்ணாமலை மாவட்டத்தில், தொடர்ந்து 4வது நளாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், காலி பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்குதல், பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந்து 4வது நளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதனால், கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து 4 நாட்களாக வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அலுவலக பணிகள் அனைத்தும் முடங்கியிருக்கிறது. மேலும், தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதற்கான ஆயத்தப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.