×

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை, பணம் திருட்டு

நெல்லிக்குப்பம், பிப். 21: நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை மரைக்காயர் நகர் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பஸ்லியா பானு (31). இவர் தனது ஒரு குழந்தையுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை வீட்டை பூட்டிக்கொண்டு, தனது மாமியார் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று மாலை வீட்டுக்கு வந்த பஸ்லியா பானு, வீட்டு முன்கதவின் பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது அறையின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் ரூ. 2 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் பின்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்