கடன் தொல்லையால் விபரீதம் நிலத்தரகர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: மகன் பரிதாப பலி

சென்னை: கடன் தகராறு காரணமாக நிலத்தரகர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கொருக்குப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், மகன் பரிதாப இறந்தார். கொருக்குப்பேட்டை தங்கவேல் பிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (47). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருக்கு சியாமளா (45) என்ற மனைவி, கார்த்திக் (22) உள்பட 3 மகன்கள் உள்ளனர். இதில், கார்த்திக் மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் இருந்து வெங்கடேசனுக்கு போதிய வருமானம் இல்லாததால், குடும்பம் நடத்த பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்த முடியாததால், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த வெங்கடேசன், நேற்று முன்தினம் மனைவி சியாமளா மற்றும் மகன் கார்த்திக் ஆகியோருடன் பூச்சிமருந்து குடித்தார். மயங்கி கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு கார்த்திக் பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: