பசுந்தேயிலை வரத்து கடும் சரிவு

மஞ்சூர்,பிப்.21: பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்ததால் தொழிற்சாலைகளில் 3 நாட்களுக்கு ஒரு முறையே தேயிலை உற்பத்தி நடைபெறுவதன் காரணமாக தொழிலாளர்கள் பலரும் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் முக்கியத்தொழிலாக தேயிலை விவசாயம் மட்டுமே உள்ளது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதையொட்டி குந்தா பகுதியில் மஞ்சூர், பிக்கட்டி, கிண்ணக்கொரை, குந்தா, கைகாட்டி, மகாலிங்கா, இத்தலார், நஞ்சநாடு, மேற்குநாடு உள்ளிட்ட 9 கூட்டுறவு ஆலைகளும் ஏராளமான தனியார் மற்றும் எஸ்டேட் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் பனி விழத் துவங்கி 4 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் உறைபனியின் தாக்கமும் அதிகரித்தது. இதனால் குந்தா பகுதியை சுற்றிலும் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் முற்றிலும் கருகியது. இதனால் தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வரத்து பல மடங்கு குறைந்தது. மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு வெறும் 7ஆயிரம் கிலோ முதல் 8 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து உள்ளதால் தேயிலைத்தூள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மஞ்சூர் பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையின் தினசரி உற்பத்தி திறன் 20 ஆயிரம் கிலோவாக உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே 8 ஆயிரம் கிலோவிற்கும் குறைவாகவே பசுந்தேயிலை வரத்து உள்ளது. இதனால் தினசரி கொள்முதல் செய்யப்படும் பசுந்தேயிலையை தொழிற்சாலை டிரப்புகளில் சேமித்து வாரத்திற்கு 3 நாட்கள் ஒருமுறை மட்டுமே தேயிலைத்தூள் உற்பத்தி மேற்கொள்ளப் படுகிறது. இதேபோல் மேற்குநாடு தொழிற்சாலையில் 4 ஆயிரம் கிலோவிற்கும் குறைவாகவே பசுந்தேயிலை வரத்து காணப்படுகிறது.

இதே போல் பெரும்பாலான கூட்டுறவு மற்றும் தனியார் ஆலைகளில் பசுந்தேயிலை வரத்து பெருமளவு குறைந்துள்ளதை தொடர்ந்து இயந்திரங்கள் பராமரிப்பு, மின்கட்டணம், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கருத்தில் கொண்டு தேயிலை உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக தொழிற்சாலை நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. மேலும் சில தனியார் தொழிற்சாலைகள் தேயிலை உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தொழிற்சாலைகளில் தேயிலை உற்பத்திபாதிக்கப் பட்டுள்ளதால் தொழிலாளர்களும் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். போதிய மழை பெய்யாவிட்டால் வரும் வாரங்களில் பசுந்தேயிலை வரத்து மேலும் பாதிக்ககூடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தார்கள்.

Related Stories: