சைக்கிள்களில் சென்று திமுகவினர் பிரசாரம்

சேலம், பிப்.21:சேலம் மாநகர பகுதியில் திமுகவினர் சைக்கிள்களில் பேரணியாக சென்று பிரசாரம் செய்தனர். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, ஓமலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியிலும், ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என்ற சைக்கிள் பிரசார பேரணி நடந்தது. சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செவ்வாய்பேட்டையில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, சைக்கிள் பேரணி பிரசாரத்தை தொடங்கி வைத்து, சைக்கிளில் சென்றார். அவருடன் 300க்கும் மேற்பட்ட திமுகவினர், கட்சி கொடியை ஏந்திச்சென்று பிரசாரம் செய்தனர். இந்த பயணம், கலெக்டர் அலுவலகம், 2வது அக்ரஹாரம், முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி வழியே கன்னங்குறிச்சியில் நிறைவடைந்தது.

இதேபோல், சேலம் தெற்கு தொகுதியில் அம்மாபேட்டையில் தொடங்கி சின்னகடைவீதி, திருச்சி மெயின்ரோடு வழியாக கொண்டலாம்பட்டியில் நிறைவடைந்தது. சேலம் மேற்கு தொகுதியில் ஏவிஆர் ரவுண்டானாவில் தொடங்கி, ஜங்ஷன் பகுதியில் முடிந்தது. இந்நிகழ்ச்சிகளில் மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், பொருளாளர் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார், மாநகர துணை செயலாளர் வக்கீல் கணேசன், பகுதி செயலாளர்கள் சக்கரை சரவணன், பிரகாஷ், சாந்தமூர்த்தி, ஜெய், முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: