சேலம், பிப். 21: சேலம் மாவட்டம் தலைவாசலில் கட்டப்பட்டுள்ள புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை, நாளை (22ம் தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோட்டில், ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் விலங்கின ஆராய்ச்சி நிலையம் அமைகிறது. இந்த வளாகத்திலேயே, 73.80 ஏக்கரில், ₹118 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தின் 5வது கால்நடை மருத்துவக்கல்லூரி கட்டப்பட்டுள்ளது. கல்லூரிக்கான நிர்வாக அலுவலக கட்டிடம், கல்விசார் வளாகம், நூலகக்கட்டிடம், விடுதி, இறைச்சி அறிவியல், பால் அறிவியல், கால்நடைப்பண்ணை வளாகம், விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை என 3.75 லட்சம் சதுரடி பரப்பில், கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.