காரைக்குடி, பிப். 21: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் இணைப்புக்கல்லூரி இளைஞர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் வினாயகமூர்த்தி வரவேற்றார். துணைவேந்தர் என்.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், ``சாலைப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கை பயணத்திலும் முக்கியமான அங்கம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் பேர் சாலைவிபத்துகளில் இறக்கின்றனர்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை இளைஞர்கள் நன்கு உணர வேண்டும். இப் பல்கலைக்கழகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த அமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். டிஎஸ்பி அருண் பேசுகையில், உலகில் உள்ள வாகன எண்ணிக்கையில் ஒரு சதவீதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. ஆனால், இந்தியாவில் 11 சதவீத விபத்துகள் நடக்கிறது. 18 முதல் 45 வயதிற்குட்பட்டவர்களே அதிகமாக விபத்துக்குள்ளாகின்றனர் என்றார். பதிவாளர் வசீகரன், ஆட்சிக்குழு உறுப்பினர் குருமூர்த்தி, கல்லூரி வளர்ச்சி குழும முதன்மையர் சிவகுமார், இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் பகிரதநாச்சியப்பன், சமுதாய வானொலி இயக்குனர் ராஜராம், மாவட்ட அமைப்பாளர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் ஆனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.