தொடர் பைக் திருட்டு சிறுவன் உட்பட 3 பேர் கைது

குன்றத்தூர், பிப். 21: மாங்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வீடு மற்றும் கடைகளின் முன்பாக நிறுத்தி வைத்த விலையுயர்ந்த  பைக்குகள் அடிக்கடி திருடு போனது. இதுதொடர்பாக, மாங்காடு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதைதொடர்ந்து போலீசார், மர்மநபர்களை பிடிக்க தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் மாங்காடு பிரதான சாலையில் நேற்று முன்தினம் போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரே வேகமாக வந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர்.

அதில், மாங்காடு அடுத்த பரணிபுத்தூரை சேர்ந்த ஸ்டீபன் (19), சஞ்சய்குமார் (19), மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது. மேலும் விசாரணையில், 3 பேரும், தினமும் இரவு நேரங்களில் மாங்காடு பகுதிகளில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்படும் விலை உயர்ந்த பைக்குகளை திருடிச்சென்று, அதனை விற்பனை செய்து, அதில் வரும் பணத்தில் மது அருந்தி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி 5 விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: