×

தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதல்; முன்னாள் முதல்வருக்குரிய அரசியல் முதிர்ச்சி எடப்பாடியிடம் இல்லை: வச்சி செய்தார் சண்முகம்

கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி வீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சந்திரசேகரனை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதாவது: மதச்சார்பற்ற கூட்டணி வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமோக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பது உறுதி. தமிழக அரசு 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் செய்து வருகிறார். தமிழக மக்கள் பயன்பெறும் விதத்தில் பல்வேறு திட்டங்கள் செய்து கொடுத்திருக்கிறார். மீண்டும் அவர் முதல்வரான பிறகு 100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி குறித்து முன் வைத்து வரும் விமர்சனங்கள் அனைத்தும் வெறும் அவதூறுகளே. ஒரு முன்னாள் முதல்வருக்குரிய அரசியல் முதிர்ச்சி அவரிடம் துளியும் இல்லை. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கத் தைரியம் இல்லாததால் தான், அவர் திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலின் மீது தரம் தாழ்ந்த தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார். இத்தகைய பிரசாரங்களை இடதுசாரி கட்சிகள் ஒருபோதும் ஏற்காது. எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று பதவி வாங்கியது உலகம் அறிந்த உண்மை. அதை மறைத்துவிட்டு இப்போது ‘புலனாய்வு புலி’ போலப் பேசுவது மக்கள் மத்தியில் எடுபடாது. பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்த அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் இரட்டை வேடம் போடுவதை மக்கள் அறிவார்கள்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவித்துள்ள ‘ஒரு பவுன் மோதிரம், மாமன் சீர்’ போன்ற திட்டங்கள் நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை. இன்றைய நிலையில் ஒரு பவுன் தங்கம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் விற்பனை ஆகிறது. தமிழகத்தின் மொத்த பட்ஜெட்டைக் கொண்டு வந்தாலும் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களை ஏமாற்றக் கூடாது. இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை இடதுசாரிகள் ஏற்க மாட்டார்கள். கந்தன் முருகன் வாக்கு என்ற பெயரில், பாஜக வெளியிடும் செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோக்கள் தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறுகின்றன. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Edappadi ,Chief Minister ,Shanmugam ,Cuddalore ,Theradi Road of Thirupadhiripuliyur, Cuddalore ,Marxist Communist Party ,Secular Progressive Alliance ,Congress ,Chandrasekaran ,State Secretary ,Secular… ,
× RELATED தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட்...