அருவியில் குளித்த 4 மாணவர்கள் பலி

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி மலையடிவாரத்தில் மேல் மற்றும் கீழ்த்தலையூற்று அருவிகள் உள்ளன. இதில், கீழ்த்தலையூற்று அருவியில் புதைகுழிகள் உள்ளதால், பொதுமக்கள் குளிக்க அனுமதி இல்லை. கரூர் மாவட்டம், பள்ளபட்டியைச் சேர்ந்த ஆதில் (19), சதாம் உசேன் (18), அயாஸ் (19), பயாஸ் (19) உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் 11 பேர் தலையூற்று அருவிக்கு வந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்தபோது மாணவர்கள் 4 பேரும் அருவியில் மூழ்கி மாயமாகினர். இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் கூச்சலிட்டுள்ளனர்.

பின்னர் விருப்பாச்சி பகுதிக்கு வந்து பொதுமக்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஒட்டன்சத்திரம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் நேற்று காலை மீண்டும் தேடும் பணியை தொடங்கிய தீயணைப்புத்துறையினர், பாறை இடுக்குகளில் சிக்கியிருந்த 3 மாணவர்களின் உடல்களை மீட்டனர். சதாம் உசேனை தேடும் பணி நடக்கிறது.

Related Stories: