குடியாத்தம் அருகே நேற்று அதிகாலை மீண்டும் ஒற்றையானை அட்டகாசம் அச்சத்தில் கிராம மக்கள்

குடியாத்தம், பிப்.19: குடியாத்தம் அருகே நேற்று அதிகாலை மீண்டும் ஒற்றையானை அட்டகாசம் செய்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கதிர்குளம், கொட்டமிட்டப்பள்ளி, மோர்தானா ஆகிய கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானையை வனத்துறையினர், பொதுமக்கள் விரட்டியடித்து வருகின்றனர். இருப்பினும் அதன் அட்டகாசம் தொடர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், நேற்று முன்தினம் அதிகாலை ஒற்றை யானை குடியாத்தம் அடுத்த சைனகுண்டா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில், அதே யானை மீண்டும் நேற்று அதிகாலை கொத்தூர், டி.பி.பாளையம் பகுதிக்குள் புகுந்தது. அங்கிருந்த விவசாய பயிர்களை சேதப்படுத்த முயன்றது. இதையறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை பொதுமக்கள் உதவியுடன் விரட்டியடித்தனர். ஒற்றையானையின் தொடர் அட்டகாசத்தால் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கடும் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

Related Stories: