23 ஆண்டு பழைய கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மகன் குற்றவாளி: சரண் அடைய 3 வாரம் அவகாசம் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பிலாஸ்பூர்: சட்டீஸ்கரில் 23 ஆண்டு பழைய கொலை வழக்கில் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி மகன் குற்றவாளி என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநிலம் உருவான போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளராக இருந்த ராம் அவதார் ஜக்கி கடந்த 2003ம் ஆண்டு பட்டபகலில் சுட்டு கொல்லப்பட்டார். சட்டீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அரசியல் கொலை வழக்கில், மொத்தம் 31 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

விசாரணை நீதிமன்றம் 28 பேருக்கு தண்டனை வழங்கிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லாததை காரணம் காட்டி மறைந்த முன்னாள் முதல்வர் அஜித் ஜோகியின் மகன் அமித் ஜோகி விடுவிக்கப்பட்டார். குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அமித் ஜோகிக்கு எதிராக சிபிஐ 11000 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. அமித் ஜோகி விடுதலையை எதிர்த்து ராம் அவதாரின் மகன் சதிஷ் ஜக்கி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றம் ஆரம்பத்தில் அமித் ஜோகிக்கு ஆதரவாக தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த வழக்கை மீண்டும் பரிசீலிப்பதற்காக சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றியது. இதை விசாரித்த சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் ராம் அவதார் ஜக்கி கொலை வழக்கில் அமித் ஜோகி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பளித்தது. மேலும் 3 வாரங்களுக்குள் அவர் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Stories: