மயிலாடுதுறை, மார்ச் 31:மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் வாகனப் பேரணியை மாவட்ட கலெக்டர் காந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையமானது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்-2026 தேதி அறிவித்துள்ளது. அதன்படி. 23.04.2026 அன்று தேர்தல் நாளாக அறிவித்துள்ளது. அன்றையதினம் அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, வாக்காளர்களுக்கு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் 50க்கு மேற்பட்டோர் தங்களின் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரில், சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களித்தல் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகளை பொருத்தியவாறு பங்கேற்றனர். இப்பேரணி, மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கி, மூங்கில்தோட்டம் வழியாக தருமபுரம் ஆதீனம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது.
உங்கள் வாக்கு உங்கள் உரிமை அதை யாருக்கும் விட்டு கொடுக்க கூடாது. 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதி செய்ய வேண்டும். சுயநலம் தவிர்த்து பொதுநலன் காக்க வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து தவறாமல் வாக்களிக்க வேண்டும். உண்மையான ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிக்கு சென்று நம் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என மாவட்ட கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது முத்துவடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
