டெல்லி: டெல்லி: ஆயுதப்படையில் பெண்களுக்கு பாகுபாடு கூடாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் நிரந்தர பணி, ஓய்வூதியத்தை உறுதி செய்தது உத்தரவிட்டுள்ளது. ஆயுதப்படைகளில் நிரந்தர பணி ஆணையத்தின் கீழ் அதிகாரிகளாக பணியமற்றப்படுவது பெரும்பாலும் ஆண்களாகவே உள்ளனர். இதனால் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி, ஓய்வூதியம் கிடைப்பதில்லை என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராணுவத்தின் நிரந்தர பணியிடங்கள் தங்களுக்கு மட்டுமே உரித்தானது என ஆண் அதிகாரிகள் எதிர்பார்க்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி மறுக்கப்பட்டது, மதிப்பீட்டு முறையில் ஊடுருவியிருந்த பாகுபாட்டின் விளைவு என்று நீதிபதிகள் கூறினார். நிரந்தர பணிக்கு தகுதியுள்ள பெண் அதிகாரிகள், 20 ஆண்டுகள் தகுதியான சேவையை முடித்தவர்களாக கருதப்படுவர். இதன் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் அனைத்து பலன்களும் கிடைக்கும் என்றும் ஏற்கனவே தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஓராண்டுக்கு 250 பெண்களுக்கு மட்டுமே நிரந்தர பணி என்ற உச்சவரம்பு தன்னிச்சையானது, சட்டவிரோதமானது என கூறி உச்சவரம்பு விதியை நீதிபதிகள் ரத்து செய்தனர். அரசியலமைப்பின், 142-வது பிரிவின் கீழ் நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
