திருமங்கலம்: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆருக்கு கோயில் அமைத்துள்ளார். அதிமுகவினரால் அம்மா கோயில் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. உதயகுமார் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இருப்பதால் கட்சி கூட்டங்களும் இங்கு அடிக்கடி நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அதிமுகவினரை அழைத்து உதயகுமார் தொடர்ந்து ஜெயலலிதா கோயிலில் கூட்டங்கள் நடத்தி வருவதாகவும், வாக்காளர்கள், கட்சி நிர்வாகிகள், மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாகவும், பரிசுப் பொருட்கள் கொடுப்பதாகவும் திமுக தரப்பில் நேற்று முன்தினம் திருமங்கலம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சிவஜோதியிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து டி.குன்னத்தூர், ஜெயலலிதா கோயிலில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் கள்ளிக்குடி எஸ்ஐ முருகன் தலைமையில் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உதயகுமார் அங்கு நிர்வாகிகளுடன் இருந்தார். பறக்கும் படையினர் அங்குள்ள அறைகளில் முழுமையாக சோதனையிட்டனர்.
