பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் 4 பவுன் நகை துணிகர பறிப்பு

திண்டிவனம், பிப். 16:  திண்டிவனம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் 4 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.  திண்டிவனம் அடுத்த கொனக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி செல்வி(48). இவர் நேற்று மதியம் வீட்டில் இருந்த போது பைக்கில் வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர் நம்பும் விதத்தில் பல்வேறு காரணங்களையும் கூறியதாக தெரிகிறது. அப்போது செல்வி என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அந்த மர்மநபர் வீட்டில் இருக்கும் தங்க நகைகளை கொடுத்தால் பரிகாரம் செய்து தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

அப்போது செல்வியின் மகள் தீபா(20), தடுத்தும் கேட்காமல் பீரோவில் இருந்த மோதிரம், நாணல் குழாய் உள்ளிட்ட 4 பவுன் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.  அப்போது அந்த நபர் நான் கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து எடுத்து வருகிறேன். அதற்குள் வீடு வாசலை சுத்தம் செய்து, குளித்து விட்டு இருக்கும்படி கூறி சென்றுள்ளார். பின்னர் பல மணி நேரம் ஆகியும் அந்த நபர் வராததால் சந்தேகமடைந்த செல்வி இதுகுறித்து, ரோசணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நூதன முறையில் தங்க நகைகளை பறித்து சென்ற நபர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: