துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் காட்டம்

சிவகிரி: துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிவகிரியில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

இதில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசியதாவது:
துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி. தனக்கு முதல்வர் பதவியை கொடுத்தவரை எந்த அளவுக்கு இழிவாக பேசினார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். குறிப்பாக தென் மாவட்ட மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். ஒரு நம்பிக்கை துரோகி அரசியலில் இருக்கக்கூடாது. நன்றி மறந்தவர் அரசியலில் இருக்கக்கூடாது என்ற நல்ல தீர்ப்பை வழங்குங்கள். எந்த நிலையிலும் பழனிசாமி என்ற நபர் தமிழகத்தில் எந்த பொறுப்புக்கும் வரக்கூடாது என்ற நிலையை 2021ல் இந்தப்பகுதி மக்கள் எடுத்தனர்.

நான் ஜெயலலிதாவிடம் எப்போதும் பதவி கேட்டதில்லை. அவர் பார்த்து பார்த்து தான் செய்தார். ஒருவர் ஆற்றுகிற பணியை பொறுத்து பதவியை வழங்குவார். நான் சாதாரண தொண்டனாக தான் வந்தேன். ஒரு டீக்கடை தான் நடத்தி வந்தேன். உங்களிடம் ஒருவனாக இருந்த என்னை முதலமைச்சராக ஆக்கியது ஜெயலலிதா. தமிழகத்தில் தற்போதையை திமுக ஆட்சியில் அனைவருக்கும் சமமான கல்வி, சமூக நீதி உடன் கிடைத்திருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக பட்டதாரிகளின் சதவீதம் 52% உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த சிறப்பான திட்டங்கள் தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: