கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நேற்று இ-மெயில் மூலம் 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்ற நிர்வாக அலுவலகத்திற்கு நேற்று காலை 9.33 மணிக்கு இ-மெயில் வந்துள்ளது. அதில், 15 சயனைடு வாயு நிரப்பப்பட்ட விஷ குண்டுகள் வெடிக்க உள்ளன.

சில குண்டுகள் ட்ரோன்கள் பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, மாவட்ட முதன்மை நீதிபதியின் நேர்முக உதவியாளர் செல்வகுமார் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி மாவட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு எஸ்எஸ்ஐ கோவிந்தராஜ், வினோத்குமார், இளையவன் உள்ளிட்ட போலீஸ் குழுவினர் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஒவ்வொரு அறையாக சோதனையிட்டனர்.

ஆனால் எந்த பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்திற்கு நடப்பாண்டு கடந்த ஜனவரி மாதம் 6ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதம் 24ம் தேதி இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. தற்போது மூன்றாவது முறையாக இந்த மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: