சென்னை: சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்த போதும் மக்கள் மீது விலை உயர்வை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மயிலாப்பூர் பகுதி செயலாளர் ஐ.ஆர்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஒன்றிய மோடி அரசு ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேல் தாக்குதலை பயன்படுத்தி சமையல் எரிவாயு விலையை ரூ.60 உயர்த்தியுள்ளது. எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்த போது விலையை குறைக்காத ஒன்றிய பாஜக அரசு தற்போது மக்கள் மீது விலை உயர்வை திணித்துள்ளது. இந்த விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மயிலாப்பூர் பகுதி சார்பில் செயிண்ட் மேரிஸ் பாலம் அருகில் இன்று மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றுகிறார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
