மதுரை, மார்ச் 10: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாடிப்பட்டி தாலுகா இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தரப்பில் அளித்த மனுவில், ‘இல்லம் தேடி கல்வி திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். முதியோர் கல்வி, மகளிர் உரிமை தொகை, எஸ்ஐஆர் படிவம் நிரப்புதல், அன்பு கரங்கள் போன்ற பணிகளில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிறப்பாக செய்து முடித்துள்ளோம். காலை உணவு திட்டம், பள்ளிகளில் கேஜி வகுப்புகள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் ஆக பணி நியமனம் வழங்க வேண்டும். கல்வி பணிகளை சிறப்பாக செய்து வரும் தன்னார்வலர்களுக்கு பணி நிரந்தரமும் மற்றும் மற்ற தன்னார்வலர்களுக்கு அவர்களின் படிப்பிற்கேற்ற வேலையும், காலியாக உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடிகளில் படிப்பிற்கேற்ற வேலையையும், ஊதியத்தையும், உயர்த்தி கொடுக்க வேண்டும். பணியினை நிரந்தரம் செய்து தர வேண்டும்’ என கூறியிருந்தனர்.
