கடலூர், பிப். 9: கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் செயல்பட்டு வந்த கொரோனா சிகிச்சை வார்டை சுத்தம் செய்து கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான வகுப்பு மாணவ, மாணவிகள் நேற்று மரத்தடியில் அமர வைக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. இட பற்றாக்குறை காரணமாக சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. இங்குள்ள பெரும்பாலான வகுப்பறைகள் வார்டாக மாற்றப்பட்டு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் வார்டு பகுதிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து கல்லூரி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் நேற்று வரை மாவட்ட நிர்வாகம் ஒப்படைக்க வில்லை.