ஜபல்பூர்: தேசிய கொடியை அவமதித்த விவகாரத்தில் மத்தியபிரதேச அமைச்சர் ராவ் உதய் பிரதாப் சிங்குக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பாஜ அரசில் போக்குவரத்து மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக ராவ் உதய் பிரதாப் சிங் பதவி வகித்து வருகிறார். இவர் சுதந்திர தினத்தையொட்டி கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி நரசிங்கபூரில் நடந்த திரங்கா யாத்திரையில் கலந்து கொண்டார்.
அப்போது, தேசிய கொடியை தனது வாகனத்தின் முகப்பில் முறையற்ற வகையில் காட்சிப்படுத்தி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கவுஷல் சிலாவத் என்பவர் ஜபல்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தேசிய கொடியை அவமதித்த அமைச்சர் ராவ் உதய் பிரதாப் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மத்தியபிரதேச அமைச்சர் ராவ் உதய் பிரதாப் சிங்குக்கு ஜபல்பூரில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
