புதுடெல்லி: ஈரானை தாக்க இந்திய துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அதை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், ஈரான் கப்பல் மீது, அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் தாக்குதலை நடத்தி உள்ளது. இதில் 80க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இந்தியாவின் துறைமுகத்தை அமெரிக்கா பயன்படுத்தியதாக செய்திகள் வெளியாகின. இதை, இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகர், தீவிர வலதுசாரி ஒன் அமெரிக்கா நியூஸ் நெட்வொர்க் தொலைக்காட்சியில் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்ததாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், ‘அமெரிக்காவை சேர்ந்த ஓஏஎன் தொலைக்காட்சியில், அமெரிக்க கடற்படை இந்திய துறைமுகங்களை பயன்படுத்துவதாக கூறப்படும் கூற்றுக்கள் போலியானவை, தவறானவை. இதுபோன்ற ஆதாரமற்ற மற்றும் புனையப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக உங்களை எச்சரிக்கிறோம்’ என்று தெளிவுபடுத்தியது. இந்தியாவால் நடத்தப்பட்ட ராணுவ பயிற்சியிலிருந்து வெளியேறிய ஒரு ஈரானிய போர்க்கப்பல் மீது, இலங்கை கடற்பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் குறித்த ஆய்வுக்கு மத்தியில், இந்தியாவின் இந்த கண்டனம் வெளியானது.
