சென்னை : ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து, சென்னைத் தலைமைச் செயலகத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.அதேபோல், கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் மற்றும் தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் நமது கூட்டணி சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க.வைச் சேர்ந்த எல்.கே. சுதீஷ் ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.நமது அரசியல்சட்ட விழுமியங்களையும் இந்திய நாட்டின் ஒற்றுமை – பன்மைத்துவம் ஆகிவற்றையும் பேணிக்காத்திடத் தொடர்ந்து பணியாற்றுவோம்!”, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
