திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்து தன்னை பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக நடிகை அளித்த புகாரின் பேரில் மஞ்சும்மல் பாய்ஸ் பட டைரக்டர் சிதம்பரம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பையனூரைச் சேர்ந்தவர் சிதம்பரம். 2022ம் ஆண்டு மலையாளத்தில் முதன்முதலாக இயக்கிய ஜானே மன் என்ற படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு கடந்த 2024ம் ஆண்டு இயக்கிய மஞ்சும்மல் பாய்ஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மலையாள சினிமாவில் முதன்முதலாக ரூ. 200 கோடி வசூலை இந்தப் படம் குவித்தது.
மலையாள மொழியிலேயே தமிழ்நாட்டிலும் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் டைரக்டர் சிதம்பரம் மீது மலையாள இளம் நடிகை பலாத்கார முயற்சி புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு கொச்சி எளம்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அத்துமீறி நுழைந்து தன்னை டைரக்டர் சிதம்பரம் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக இளம் நடிகை கொச்சி தெற்கு போலீசில் புகார் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து டைரக்டர் சிதம்பரம் மீது பிஎன்எஸ் 74, 75 ஆகிய பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே வழக்கு குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்தப்படும் என்றும், தேவைப்பட்டால் அவரை கைது செய்வோம் என்றும் கொச்சி போலீசார் தெரிவித்தனர். இது மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
