நெல்லை, மார்ச் 2: நெல்லை அடுத்த தாழையூத்து சங்கர்நகரில் அமைந்துள்ள சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் துறை மற்றும் வேலை வாய்ப்பு பிரிவு சார்பில் தொழில்துறையும், கல்லூரியும் இணைந்த சங்கமம் (2026) என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டெல்பி டிவிஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து சங்கர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறைத்தலைவர் செல்லப்பா வரவேற்றார். சிறப்புரை ஆற்றிய கல்லூரியின் நிர்வாக அதிகாரி னிவாசன், சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான தொழில்துறை வேலைவாய்ப்புகள், அவற்றை பயன்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். இதையடுத்து டெல்பி டிவிஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சார்பில் முதலாம் ஆண்டு மற்றும் 2ம் ஆண்டு பயிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களில் 16 பேருக்கு கல்வி உதவித்தொகையை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் அந்நிறுவனத்தின் மேலாளர் நாகராஜன் வழங்கினார்.
இதையடுத்து இந்தாண்டு டெல்பி டிவிஎஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு தேர்ந்தெடுப்பதற்கான வளாக நேர்காணல் நடத்தப்பட்டது. இவ்வாறு இந்த நேர்காணலில் தேர்வான 18 மாணவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கிய அந்நிறுவனத்தின் மனிதவள மேலாளர் நந்த கிஷோர், பணி நெறிமுறைகள், பணி சூழல் மற்றும் பணியில் சேர வேண்டிய நாள் குறித்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் எடுத்துரைத்தார். மேலும் பியூல் இன்ஜெக்க்ஷன் டெக்னாலஜி என்ற தொழிற்சாலை சார்ந்த விருப்ப பாடத்தை பயிலும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கான இரு நாள் தொழிற்பயிற்சி முகாம் துவங்கியது.
நிகழ்ச்சிகளில் பாலிடெக்னிக் கல்லூரியின் துணை முதல்வர் நசீர் அஹமது, நிர்வாக அதிகாரி னிவாசன், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இயந்திரவியல் துறை விரிவுரையாளர் பொன்ராஜன் விக்ரம் நன்றி கூறினார்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை வேலைவாய்ப்பு பிரிவு அலுவலர்கள் சுந்தரவடிவேல், சிவசைலம் மற்றும் விரிவுரையாளர் பொன்ராஜன் விக்ரம் ஆகியோர் செய்திருந்தனர்.
