திருப்போரூர்: சென்னை அருகே பிரசித்தி பெற்ற மிகப் பழமையான திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் கடந்த 21ம் தேதி மாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று காலை கந்தசுவாமி திருக்கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, தேர் அலங்கரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை (27ம் தேதி) 9.45 மணியளவில் மலர்கள் மற்றும் வண்ண பதாகைகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி, தெய்வானை சமேதராக முருகப்பெருமான் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அரோகரா’ கோஷங்களுடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
4 மாடவீதிகளிலும் பக்தர்களுக்கு மோர், குடிநீர் பாட்டில், ரஸ்னா, குளிர்பானங்கள், புளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன், மாவட்ட போலீஸ் எஸ்பி சிபின், மாமல்லபுரம் டி.எஸ்பி அறிவழகன், எம்எல்ஏக்கள் திருப்போரூர் எஸ்.எஸ்.பாலாஜி, மதுராந்தகம் மரகதம் குமரவேல், திருப்போரூர் ஒன்றியக்குழுத் தலைவர் எல்.இதயவர்மன், பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ் உள்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று முருகனை வழிபட்டனர். இங்கு திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் ராஜலட்சுமி, கோயில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். திருப்போரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடமாடும் கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தீவிர தூய்மைப்படுத்தும் பணிகளும், டேங்கர் லாரிகள் மூலம் 4 மாடவீதிகளிலும் தண்ணீரை பீய்ச்சியடித்து சுத்தப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
