- கிராமக் கோயில் பாதிரியர்
- சென்னை
- அமைச்சர்
- சேகர் பாபு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- மயிலாப்பூர், சென்னை
- இந்து மதம்
- மதம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர்
- பி. கே. சேகரபாபு
சென்னை: சென்னை மயிலாப்பூரில் நாளை நடைபெறும் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், அர்ச்சகர் மற்றும் பணியாளர்களின் நலன் காக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருவதோடு, நிர்வாகக் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணிக்கு நிதியுதவி, கிராமக்கோயில் பூசாரிகளின் நலன் காக்கும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், முதல்வர் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதி திருக்கோயில்களின் திருப்பணி நிதியுதவி எண்ணிக்கை ஆண்டிற்கு 1,250 ஆக உயர்த்தப்பட்டதோடு, நிதியுதவி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டு, இதுவரை 5,000 திருக்கோயில்களுக்கு ரூ.106.25 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கிராமக் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கிராமக் கோயில் பூசாரிகள் நல வாரியம் அமைக்கப்பட்டு, பூசாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, குடும்ப நல நிதி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் சென்னை, மயிலாப்பூரில் நாளை (28.02.2026) நடைபெறும் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ. 1,500/- வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்விழாவில் அமைச்சர்கள், ஆதீன பெருமக்கள், சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
