சென்னை: பாமகவில் தந்தை-மகன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சி இரண்டு அணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், கட்சியின் தலைவராக தம்மை அறிவிக்கக்கோரியும் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஏற்கனவே இதேபோல் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. எனவே, பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சியின் உள் விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில்தான் நிவாரணம் பெற முடியும் என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், தன்னை கட்சியின் தலைவராக அறிவிக்க கோரியும் ராம்தாஸ் தாக்கல் செய்த மனு சென்னை 13வது உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து அன்புமணி மற்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
