சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான மக்கள் தோழர் இரா.நல்லகண்ணு காலமானார். அவருக்கு வயது 101. மறைந்த தோழர் நல்லகண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே மருத்துவ மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது. மறைந்த நல்லக்கண்ணுவுக்கு அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;
இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவராகப் போற்றப்படுபவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான தோழர் R. நல்லக்கண்ணு உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தேன்.
ஏழை, எளிய இந்திய சுதந்திரப் போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போரட்டம் என தனது வாழ்நாள் முழுவதையும் மக்களின் நலனிற்காகவே அர்ப்பணித்தவர் தோழர் R. நல்லக்கண்ணு. தனது இறுதி மூச்சு வரை. பொதுவுடைமை சித்தாந்தங்களைக் கடைபிடித்து அதற்கு இலக்கணமாக வாழ்ந்த அவர், எளிமையான வாழ்வு மற்றும் தன்னலமற்ற பொதுத்தொண்டின் வாயிலாக மக்கள் மனதில் என்றென்றும் நினைவு கூரப்படுவார். அவரது இழப்பு தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
