×

திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்க்கில் காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்: சிசிடிவி மூலம் போலீசார் தேடுதல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மப்பேடு கூட்டு சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சித்தையா ஜெகதீஷ் என்ற பாபு நாயுடு என்பவருக்கு சொந்தமானது. இங்கு ஊழியராக நாகராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு 8 மணி அளவில் ஒரு கார் வந்துள்ளது. காரில் இருந்தவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு டீசல் போடும் படி தெரிவித்துவிட்டு பின்னர் டேங்க்கை நிரப்பும்படி தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ரூ.4,123 க்கு டீசல் போட்டு நிரப்பியுள்ளார். இதன்பின்னர் ஊழியர் பணத்தை கேட்டபோது கார் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டது. இதையடுத்து நாகராஜ் பைக்கை எடுத்துக்கொண்டு அந்த காரை விரட்டிச்சென்று சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த காரை மடக்க முயற்சி செய்தபோது அவரது பைக் மீது காரை வைத்து இடித்துவிட்டு சென்றுவிட்டனர். இதன்பிறகு மப்பேடு காவல் நிலையத்தில் நாகராஜ் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பெட்ரோல் பங்க்கில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு நம்பரை வைத்து தேடி வருகின்றனர்.

Tags : Thiruvallur ,Mapedu Joint Road ,Kadampathur Union ,
× RELATED குற்ற வழக்கு தொடர்வு துறையில் அரசு...