சென்னை: ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி இன்று சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு இன்று 78வது பிறந்த நாளாகும். இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கும், எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அதிமுக முன்னணி தலைவர்கள் மாலை அணிவித்தனர். ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மலரையும் எடப்பாடி வெளியிட்டார். கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அதிமுக கொடியை ஏற்றி வைத்து, அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் எடப்பாடி இனிப்பு வழங்கினார்.
ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் 78 கிலோ எடை கொண்ட கேக்கினை எடப்பாடி பழனிசாமி வெட்டி அனைவருக்கும் கேக் வழங்கினார். ஏழைகளுக்கு வேஷ்டி, சேலை மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
அதேபோன்று அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி, இன்று காலை 10 மணிக்கு சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர். அதேபோன்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது போட்டோவுக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.
