கேரளாவின் பெயர் கேரளம் என மாற்றப்படுமா..?

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான மசோதா இன்று நடைபெறும் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு முக்கிய முடிவாகும். அதிகாரப்பூர்வ பதிவுகளில் பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை மாநில சட்டமன்றம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. கேரள சட்டமன்றத்தின் 140 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக மே மாதத்திற்கு முன்பு தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தேர்தல் ஆணையத்தால் இதுவரை அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

2024 ஆம் ஆண்டு தீர்மானத்தை முன்மொழிந்த முதலமைச்சர் பினராயி விஜயன், நாட்டின் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் தென் மாநிலத்தின் பெயரை “கேரளா” என்பதிலிருந்து “கேரளம்” என்று மாற்ற வேண்டும் என கூறினார். முதல் தீர்மானத்தை மதிப்பாய்வு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் சில தொழில்நுட்ப மாற்றங்களை பரிந்துரைத்ததால், ஜூன் 25, 2024 அன்று சட்டமன்றம் இரண்டாவது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றியது.

மலையாளத்தில் இந்த மாநிலம் ‘கேரளம்’ என்று அழைக்கப்படுவதாகவும், மலையாள மொழி பேசும் சமூகங்களுக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே எழுந்ததாகவும் முதல்வர் கூறினார்.

“ஆனால் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 3வது பிரிவின் கீழ் அதை ‘கேரளம்’ என்று திருத்தவும், அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என்று மறுபெயரிடவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியிருந்தார்.

Related Stories: