ஊட்டியில் புதர்மண்டி பாழடைந்து வரும் பழைய மருத்துவமனை கட்டிடங்கள்

ஊட்டி : ஊட்டி பழைய மருத்துவமனை கட்டிடங்கள் புதர்மண்டி பழடைந்து வருகிறது.நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு இந்த ஊட்டியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு அறிவித்ததை தொடர்ந்து இம்மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்ந்தது.

தொடர்ந்து ஊட்டி பிங்கர்போஸ்ட் அருகே ரூ.499 கோடியில் அரசு மருத்துவ கல்லூரியும், மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. மருத்துவமனையை கடந்த ஏப்ரல் மாதம் ஊட்டிக்கு வந்திருந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பழைய மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து அனைத்து பிாிவுகளும் புதிய மருத்துவமனை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன. குழந்தைகள் பிரிவு மட்டும் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

மற்ற அனைத்து கட்டிடங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சுமார் 10 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் புறநோயாளிகள் பிரிவு, சித்தா, ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவைகள் மூடப்பட்டுள்ளன.

இக்கட்டிடங்களை சுற்றிலும் புதர் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து காட்சியளிக்கின்றன. மேலும் சமூக விரோத செயல்கள் அரங்கேறும் இடமாக மாறி வருகின்றன. எனவே பயன்படுத்தாமல் உள்ள இக்கட்டிடங்களை வேறு துறைகளுக்கு ஒதுக்கி பயன்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: