புளியந்தோப்பில் முதல்வரின் மனிதநேய விழா; 1800 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு வழங்கினர்

 

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு, டிகாஸ்டர் சாலையில் உள்ள டான்பாஸ்கோ பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேற்று மாலை முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு மனிதநேய விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ உள்பட பலர் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், முதல்வரின் பிறந்தநாள் விழாவை பல்வேறு வகைகளில் கொண்டாடி வருகிறோம். இவை அனைத்திலும் முதல்வருக்கு மகிழ்ச்சி தருவது, தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுதான். முதல்வரை எத்தனையோ பேர் பாராட்டினாலும், நீங்கள் அனைவரும் வயிறார உண்டு பாராட்டினால்தான் அவருக்கு மகிழ்ச்சி. நீங்கள் வேலை செய்யாமல் இருந்தால், நாட்டில் அனைத்து பணிகளுமே கோளாறு ஆகிவிடும். திமுக அரசுக்கு தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்’ என்றார்.

அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், விவசாயிகள் பயிர்களை காத்து நெல்லை அறுவடை செய்வது போல், தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை சந்தித்தாலும், இறுதியாக பலனை அனுபவித்துள்ளனர். 1400 தூய்மை பணியாளர்களை என்.எல்.எம்மில் எடுத்து கொண்டது போல், ராம்கி நிறுவனத்தில் வேலை பார்த்த 450 பேரை, யாரும் கேட்காமலே என்.எல்.எம்மில் எடுத்து கொண்டது நமது அரசு. அனைவருக்கும் கேட்காமலே வழங்குவது, நம் திராவிட மாடல் அரசு. இனி 1850 தூய்மை பணியாளர்களுக்கும் அறுசுவை காலை உணவு வழங்கப்படும். உங்களுக்காக நாங்கள் இருப்போம், எங்களுக்காக நீங்கள் இருப்போம் என்று தெரிவித்தார். இதில் தூய்மை பணியாளர் தொழிற்சங்க பிரதிநிதியான உழைப்போர் உரிமை இயக்க தலைவர் பாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Related Stories: