போபால்: மத்தியப்பிரதேச சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்தது. விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் உமாங் சிங்கர், சிங்க்ரவுலியில் அரசுக்கும் அதானி குழுமத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தை மேற்கோள்காட்டி மின்சாரம் வாங்கும் பெயரில் 25 ஆண்டுகளில் நிறுவனத்துக்கு ரூ.1.25லட்சம் கோடியை அரசு செலுத்த தயாராகி வருவதாக கூறினார். இதற்கு அமைச்சர் விஸ்வாஸ் சாரங் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த விவாதத்தின்போது நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா பொறுமை இழந்து பேசினார்.
அவருக்கும் சிங்கருக்கும் இடையேயான காரசாரமான விவாதத்தின்போது விஜய் வர்கியா தகாத வார்த்தையை பயன்படுத்தினார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விஜய் வர்கியாவை ராஜினாமா செய்யக்கோரி கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அவைத் தலைவர் அவையை சற்று நேரம் ஒத்திவைத்தார். அவை மீண்டும் தொடங்கியபோது சங்கடமான சூழ்நிலையை குறித்து அவை தலைவர் தோமர் வருத்தம் தெரிவித்தார். இதேபோல் முதல்வர் மோகன் யாதவும் தெரிந்தோ, தெரியாமலோ சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு அவையின் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
