- சாம்பியன்ஸ் லீக் மகளிர் கால்பந்து
- ஐக்கிய
- மாட்ரிட்
- டுரின்
- மான்செஸ்டர் யுனைடெட்
- அட்லெடிகோ மாட்ரிட்
- சாம்பியன்ஸ் லீக் மகளிர் கால்பந்து போட்டி
- டுரின், இத்தாலி
டுரின்: சாம்பியன்ஸ் லீக் மகளிர் கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, அத்லெடிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி முதல் முறையாக காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இத்தாலியின் டுரின் நகரில் சாம்பியன்ஸ் லீக் மகளிர் கால்பந்தாட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் (மேன் யுனைடெட்) – அத்லெடிகோ மாட்ரிட் அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் மேன் யுனைடெட் அணி வீராங்கனைகள் பம்பரமாய் சுழன்றாடி கோல் போடுவதில் முனைப்பு காட்டினர். அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அத்லெடிகோ அணி வீராங்கனைகள் திணறினர். போட்டியின் 28வது நிமிடத்தில் யுனைடெட் அணியின் ஜூலியா ஜிகியோட்டி ஒல்மே தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார்.
அவரைத் தொடர்ந்து போட்டியின் 41வது நிமிடத்தில் யுனைடெட் அணியின் ஜெஸ் பார்க் அசத்தலாக பந்தை கடத்திச் சென்று அணியின் 2வது கோல் போட்டு கரவொலி பெற்றார். மாறாக, மாட்ரிட் அணி வீராங்கனைகளால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியாமல் போனது. அதனால், 2-0 என்ற கோல் கணக்கில் மேன் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து, அந்த அணி முதல் முறையாக சாம்பியன்ஸ் லீக் போட்டியில் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. நேற்று நடந்த மற்றொரு போட்டியில் இரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள உல்ஸ்பர்க் அணி, 2-0 என்ற கணக்கில் ஜுவன்டஸ் அணியை வெற்றி கண்டது. அந்த அணி, 13வது முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
